

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' படம் பொங்கலுக்கு முன்னதாக வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
'தர்பார்' படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனிடையே, இந்தப் படத்தை ஜனவரி 9-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது. ஜனவரி 9-ம் தேதியே வெளியிட்டால் 2 வாரங்கள் வசூலை அள்ளிவிடலாம் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளனர்.
தற்போது, இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக பல்வேறு முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டியிட்டனர். அதில் வேல்ஸ் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி முறையாக அறிவிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'தர்பார்' பணிகளை ரஜினி முடித்துவிட்டதால், தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.