

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் - ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பூஜை சென்னையில் நடைபெற்றது.
புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வந்த 'பொன்மகள் வந்தாள்' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்தப் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜோதிகாவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால், 'கத்துக்குட்டி' பட இயக்குநர் இரா.சரவணன் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தின் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று (நவம்பர் 28) சென்னயில் நடைபெற்றது. முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் நடைபெறும் இந்தப் படத்தின் ஷூட்டிங் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (நவம்பர் 29) முதல் நடைபெறவுள்ளது. 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். முஜூபுர் ரஹ்மான் கலை இயக்குநராகவும், ரூபன் எடிட்டராகவும் பணியாற்ற உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் சிவகுமார், சூர்யா, பாண்டிராஜ், கல்யாண், சி.கெளதம்ராஜ், ஞானவேல், குகன் சென்னியப்பன், எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன், ராம்ஜி, எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.