

நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ், நடிகர் விஜய்யின் உறவினர் பெண் சினேஹா பிரிட்டோவைத் திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் சகோதரி பேத்தியான சினேஹா பிரிட்டோ, 2012 ஆம் ஆண்டு 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் சிங்கப்பூரில் எம்பிஏ படித்துக்கொண்டிருக்கும்போது, அதர்வாவின் இளைய சகோதரர் ஆகாஷும் அதே வகுப்பில் இணைந்து படித்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது குடும்பத்திலும் சம்மதம் வாங்க சில வருடங்கள் பிடித்ததாகவும், தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் டிசம்பர் முதல் வாரம் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் தெரிகிறது.
ஆகாஷ், உணவக வியாபாரத்தில் இருக்கிறார். நடிக்கவும் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. சினேஹா பிரிட்டோவின் குடும்பத்தினர் சில ஹோட்டல்களையும், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரின் நிச்சயம் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கு விஜய், டெல்லி படப்பிடிப்பிலிருந்து வந்து பங்கெடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல முன்னணி கோலிவுட் நட்சத்திரங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.