தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்தலைப்பு ‘சுருளி’: படக்குழு மறுப்பு

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்தலைப்பு ‘சுருளி’: படக்குழு மறுப்பு
Updated on
1 min read

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்துக்கு ‘சுருளி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு, படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அசுரன்’. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலைத் தழுவி எழுதப்பட்டது. பஞ்சமி நிலம், சாதிப் பிரச்சினை குறித்துப் பேசிய இந்தப் படம், எல்லோராலும் கொண்டாடப்பட்டது.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் லண்டனில் முடிவடைந்துள்ளது. ஒரேகட்டமாக 64 நாட்களில் தொடர்ச்சியாகப் படம் பிடித்துள்ளனர். எனவே, ‘அசுரன்’ வெற்றியைக் கொண்டாடக்கூட தனுஷ் இந்தியா வரவில்லை.

ஹீரோயினாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் படக்குழு, பேட்ச் ஒர்க் காட்சிகளை மட்டும் இந்தியாவில் படமாக்க உள்ளது. அடுத்த ஆண்டு (2020) கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘சுருளி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து படக்குழுவிடம் கேட்டபோது, ‘இது தவறான தகவல். இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை. பரிசீலனையில் மட்டுமே இருக்கிறது’ எனத் தெரிவித்தனர்.

இது தனுஷின் 40-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in