Published : 14 Nov 2019 06:50 PM
Last Updated : 14 Nov 2019 06:50 PM

'தர்பார்' அப்டேட்: டப்பிங் பணிகளைத் தொடங்கிய ரஜினி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'தர்பார்' படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் ரஜினி.

ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் எடிட்டிங் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்து டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இதில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் இன்று (நவம்பர் 14) தொடங்கப்பட்டதாக படக்குழு அறிவித்தது.

தற்போது லைகா நிறுவனம் டப்பிங் ஸ்டுடியோவில், ரஜினி டப்பிங் பேசும் புகைப்படங்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 'தர்பார்' படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ரஜினி.

சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட, 'தர்பார்' படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வரவுள்ள இந்தப் படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x