

புதுச்சேரி
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வரும் என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னகப் பண்பாட்டுக் கலை மையம் இணைந்து ஆண்டுதோறும் நவம்பர் 13 ஆம் தேதி சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.
அதன்படி, புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை ஆர்த்தி, நடிகர்கள் கணேஷ், விக்னேஷ், உதயா, அரசு சார்பில் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் நாடக நடிகர்கள் சேர்ந்து மேளதாளம், அலங்கரிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் படத்துடன் ஊர்வலமாக வந்து மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஐசரி கணேஷ், "நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பதே எங்கள் புகார். தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை. மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன. திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி படம் வெளியாகும்" எனத் தெரிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்