

டெல்லியில் நடைபெற்று வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு காற்று மாசால் பாதிக்கப்படவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது டெல்லியில் படத்தின் முக்கியமான பாடலொன்றைப் படமாக்கி வருகிறார்கள். தற்போது டெல்லியில் காற்று மாசு என்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்று (நவம்பர் 6) காற்று மாசு குறைந்து, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தக் காற்று மாசால் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இதைப் படக்குழு மறுத்துள்ளது. சரியாகத் திட்டமிட்டவாறு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. எவ்விதத் தடங்கலுமே இல்லாமல் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. மாளவிகா மோகனனும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் விஜய் - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் எனத் தெரிகிறது.