

வைபவ், பார்வதி நாயர் மற்று முனீஷ்காந்த் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'ஆலம்பனா' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
'சிக்ஸர்' படத்தைத் தொடர்ந்து 'லாக்கப்', 'காட்டேரி', 'டாணா' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வைபவ். தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற படம் தமிழக மக்களிடையே பிரபலம். அதே பாணியில் உருவாகும் படத்தில்தான் வைபவ் நடிக்கவுள்ளார். புதுமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கவுள்ளார். இவர் 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் துணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.
இதில் பார்வதி நாயர், முனீஷ்காந்த், திண்டுக்கல் ஐ.லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 'ஆலம்பனா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது. வைபவ் நடிப்பில் உருவான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி, ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக கோபி ஆனந்த் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரியவுள்ளனர்.