கமலுக்கு ஏன் விருதில்லை: பட்டுக்கோட்டை பிரபாகர் ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை

கமலுக்கு ஏன் விருதில்லை: பட்டுக்கோட்டை பிரபாகர் ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை
Updated on
1 min read

கமலுக்கு ஏன் விருதில்லை என்று எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை உருவாகியுள்ளது.

கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு விழா, நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினரைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து தங்களுடைய கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இதில் சிலருடைய கருத்துகள் கமலுக்கு ஏன் கொடுக்கவில்லை என்ற ரீதியிலும் அமைந்துள்ளது.

கமலுக்கு விருதுக் கொடுக்காதது குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பதிவில், "குழந்தை நட்சத்திரமாக தன் கலைப் பயணத்தைத் துவங்கி, தன் வளர்ச்சிக்காகப் பொழுது போக்குப் படங்களையும், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காகப் பரிசோதனை முயற்சிகளையும் 60 வருடங்களாக மாறி மாறி கொடுத்து, தன் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி சமூக சேவை செய்ய வைத்து, இன்று அரசியல் களத்திலும் குதித்து முரட்டு ஓட்டு வங்கிகள் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுக்கு நடுவில் மாற்று ஆட்சிக்கான விதையை விதைத்து அந்த லட்சியத்தை நோக்கிச் சோர்ந்து போகாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தகுதியானவரா அல்லது......?" என்று தெரிவித்துள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

இந்தப் பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் பலர் எதிர்ப்புகளையும், கமல் ரசிகர்கள் தங்களுடைய ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in