

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
'கைதி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'தளபதி 64' படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறவுள்ளது.
இதனிடையே 'மாநகரம்' படம் வெளியாகி நீண்ட நாட்கள் கழித்தே 'கைதி' படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இடையே, இரண்டு படங்களுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், 'கைதி' படமே இறுதியில் முடிவாகி இயக்கியுள்ளார்.
'கைதி' படத்துக்கு முன்பாக, சூர்யாவை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். காமிக்ஸ் கதையில் மிகவும் பிரபலமான 'இரும்பு கை மாயாவி' கதையைத் தான் சூர்யாவை வைத்து படமாக்கத் திட்டமிட்டுள்ளார். ஆனால், படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களால் இந்தப் படத்தைத் தள்ளி வைத்துவிட்டது தயாரிப்பு நிறுவனம்.
'கைதி' படத்துக்காக ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூட, சூர்யா - லோகேஷ் கனகராஜ் இருவரும் இணையப் பேச்சுவார்த்தை நடந்ததை கார்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இந்தக் கூட்டணி இணைய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
'தளபதி 64' படத்துக்குப் பிறகு சூர்யா படமா அல்லது 'கைதி 2' முடித்துவிட்டு சூர்யா படமா என்பது வரும் நாட்களில் முடிவாகிவிடும்.