

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கவுள்ள படத்துக்கு 'கபடதாரி' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
’ரங்கா’, 'மாயோன்', 'வால்டர்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வரும் சிபிராஜ், புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானார். நவம்பர் 1-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் இந்தப் படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்தப் படத்துக்கு 'கபடதாரி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. ஒரேகட்டமாகப் படப்பிடிப்பை முடித்து மார்ச் 2020-ல் 'கபடதாரி'யை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
முன்பாகவே, சிபிராஜ் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூட்டணி இணைந்து 'சத்யா' என்ற படத்தைக் கொடுத்துள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.