Published : 24 Oct 2019 12:16 PM
Last Updated : 24 Oct 2019 12:16 PM
சினிமாவில் நிறையப் பேர் ஏறிய ஏணியை மறந்துவிடுகிறார்கள் என்று 'அல்டி' இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி வேதனையுடன் குறிப்பிட்டார்.
எம்.ஜே. ஹுசைன் இயக்கத்தில் அன்பு மயில்சாமி, மனிஷா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அல்டி'. ஷேக் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாக்யராஜ், விஜய் சேதுபதி, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசியதாவது:
'’இந்த விழாவுக்கு வந்தவுடன் விஜய் சேதுபதியைப் பற்றிச் சொன்னார்கள். இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை வாழ்த்திக் கொண்டே இருக்கும் அவரை ரொம்பவே பாராட்டுகிறேன். நல்ல உள்ளம் வேண்டும். இன்றைக்கும் நம்பர் 1 பிஸியான நடிகர் என்றால் விஜய் சேதுபதிதான். அவர் ஷுட்டிங் போறேன் என்று சொல்லவே தேவையில்லை. ஷுட்டிங் இல்லை என்று சொன்னால்தான் ஆச்சர்யம்.
சினிமாவில் நிறையப் பேர் ஏறிய ஏணியை மறந்து விடுகிறார்கள். விஜய் சேதுபதி மட்டும் அந்த ஏணியைக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதற்குப் பாராட்டுகிறேன். இங்கு ஹீரோக்கள் மற்றுமொரு ஹீரோவைப் பாராட்டுவதே கடினம். இந்த விழாவுக்கு வந்து வாழ்த்திவிட்டுச் செல்கிறார் என்றால் அது பெருமைக்குரிய விஷயம்.
மயில்சாமி பெரிதாக காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. திருக்குறள் மாதிரி 2 வரி தான், ஆனால், அர்த்தம் பெரிது. அவர் அனைவரிடமும் நல்லவராக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதுதான் தவறு. இங்கு பல தலைவர்கள் நல்ல நாளில் காலமாகிவிட்டார்கள். தற்போது யார் தலைவராகவுள்ளார் என்பதே அனைவரது மனதிலும் பிணைந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறது தமிழ்நாடு.
ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றால் அது பிரச்சினையே அல்ல. என்னால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். ஆகையால் எனக்குப் பிரச்சினையே இல்லை. 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தைத் திரையரங்கில் பார்த்து ரசித்தேன். ஹவுஸ் ஃபுல்லான படத்தை அடுத்த நாள் எடுத்துவிட்டார்கள். ரொம்பவே வருத்தப்பட்டேன். சிறு படங்களைக் குறைந்தது 5 நாட்கள் ஓட்டுங்கள். நான் பேசியது கரடுமுரடாக இருக்கும். ஆனால், உள் அர்த்தம் வாங்கிக் கொள்ளாமல் தவறு என்பார்கள்.
மக்கள் ஏன் இப்போது திரையரங்கிற்கு வருவதில்லை எனத் தெரியவில்லை. அதற்கு தமிழ் ராக்கர்ஸ் காரணம் என்கிறார்கள். அவர் யாரென்று தெரியவில்லை. அப்படித் தெரிந்தால் அவர் காலில் போய் விழுந்து 5 நாள் விடுடா ப்ளீஸ் என்று கேட்பேன்”.
இவ்வாறு ராதாரவி பேசினார் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT