

சென்னை
பார்வையற்றவரான திருமூர்த்தி இமான் இசையமைக்கும் புதிய படமொன்றில் பாடகராக அறிமுகம் ஆகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. பிறவியிலேயே பார்வையற்றவரான இவர், சமீபத்தில் பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது. இதைப் பார்த்த இசையமைப்பாளர் இமான், அவருடைய விவரங்களைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசியுள்ளார். மேலும், திருமூர்த்தி பாட வாய்ப்பு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் இமான் பங்கேற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திருமூர்த்தியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அப்போதுதான் இமான், திருமூர்த்தியை நேரில் பார்த்தார். கடந்த சில வருடங்களில் கிட்டத்தட்ட 140 புதிய திறமைகளை இமான் அறிமுகம் செய்துள்ளார். ஆனால் இதை, பாவப்பட்டுச் செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜீவா நடிக்கும் 'சீறு' எனும் புதிய படத்தில் திருமூர்த்தி பாட உள்ளதாக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இமான். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ரத்ன சிவா இயக்குகிறார். இமான் தன்னுடைய பதிவில், "தம்பி திருமூர்த்தியை பாடகராக இப்படத்தில் அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஆத்மார்த்தமான பாடல் விரைவில் வருகிறது," எனப் பதிவிட்டுள்ளார்.