Published : 21 Oct 2019 12:31 PM
Last Updated : 21 Oct 2019 12:31 PM

தொடர்ச்சியாக சீண்டிய விஜய் ரசிகர்கள்: 'கைதி' தயாரிப்பாளர் பதிலடி

விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக சீண்டி வந்ததற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார் 'கைதி' தயாரிப்பாளர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படமும், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' படமும் தீபாவளி வெளியீடாக வெளியாகவுள்ளன. இந்த முறை ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால், அக்டோபர் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றே இரண்டு படங்களும் வெளியாகவுள்ளன.

'பிகில்' படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்துவிட்டாலும், முதல் பிரதி எடுப்பதற்கான கடைசிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'கைதி' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் 'கைதி' படத்துக்காக பல்வேறு இணையவழி விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று (அக்டோபர் 20) மாலை "பாடல்கள் கிடையாது, நாயகி கிடையாது, டூப் கிடையாது" என்று ஒரு விளம்பரத்தைத் தயார் செய்து இணையத்தில் வெளியிட்டார்கள். இதை சிலர் 'பிகில்' படத்தைத்தான் சொல்கிறார் எனக் கூறத் தொடங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக மீம்ஸ் வழியாகவும், 'கைதி' தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ட்விட்டர் கணக்கை மேற்கோளிட்டும் திட்டத் தொடங்கினார்கள். இதனால் இணையத்தில் சர்ச்சை உருவானது.

விஜய் ரசிகர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில், "பல ரசிகர்கள் நம்பும் முட்டாள்தனமான கருத்து அது. ஒவ்வொருவரிடமும் சென்று என்னால் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் படம் எடுக்கிறோம். அதற்குத் துணை நிற்கிறோம். அவ்வளவே.

ரசிகர்கள் சண்டை போட அவர்களாகவே கிண்டல் செய்ய ஏதோ தேடிப் பிடிப்பார்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு எல்லா படங்களும் நன்றாக ஓட வெண்டும் என்றுதான் விருப்பம். முட்டாள்தனமான அணுகுமுறையின் மூலம், அவதூறான பதிவுகளை வைத்து மாற்றத்தை உண்டாக்கலாம் என்று நினைக்கும் முகமில்லாத நபர்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை" என்று எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x