

கொடூரச் செயல் இது என்று 'மிக மிக அவசரம்' வெளியீட்டுச் சர்ச்சை குறித்து இயக்குநர் பாரதிராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள படம் 'மிக மிக அவசரம்'. நேற்று (அக்டோபர் 11) இந்தப் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், வெறும் 17 திரையரங்குகள் மட்டுமே கிடைத்ததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது படக்குழு.
இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ரவீந்திரன் சந்திரசேகரன், 'மிக மிக அவசரம்' வெளியீடு தொடர்பான தன் வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும், திரையரங்கு உரிமையாளர்களைக் கடுமையாகச் சாடிப் பேட்டியளித்தார் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. தயாரிப்பாளர் சங்கமும் இந்த விவகாரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'மிக மிக அவசரம்' வெளியீட்டுச் சர்ச்சை தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீப காலத்தில் நான் பார்த்து ரசித்த திரைப்படம், சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள ’மிக மிக அவசரம்’. பெண்களின் கொடுந்துயர் ஒன்றினை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம். 'சமுதாயத்துக்குத் தேவையான இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்' என்று அமைச்சர் பெருமக்கள், காவல்துறை அதிகாரிகள், பெண் ஆளுமைகள் எனப் பலர் நெகிழ்ந்து பாராட்டிய படம்.
கடந்த 11-ம் தேதி இப்படம் வெளியாவதாக இருந்தது. அதற்கு முன் மூன்று வாரங்களுக்கு மேலமாக 85 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால், படம் வெளியாகும் முதல் நாள் இரவு 17 காட்சிகள் தான் திரையிட முடியும் என்று கூறிவிட்டனர் திரையரங்க உரிமையாளர்கள். காரணம் அதே நாளில் வேறு படம் வருகிறதாம். அதற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்குவோம் என்று கூறிவிட்டனர். பத்துமாதம் சுமந்து பல வலிகளைத் தாங்கி பிரசவிக்கும் நேரம், பெண்ணின் வயிற்றில் கட்டையால் அடிப்பது போன்ற கொடூரச் செயல் இது.
மக்கள் எந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்பதை யாரோ சிலர் தீர்மானிப்பது முறையல்ல. தவிர எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதன் நெறிமுறைகளுக்கு வாக்குக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அனைவருக்கும் நல்லது. திரையரங்க உரிமையாளர்கள் இதேபோக்கைத் தொடர்ந்தால், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
திரைத்துறையினரிடம் அக்கறையும் பாசமும் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள், இது போன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு மீண்டும் பிரச்சினை வராமல் இருக்க நல்லதொரு தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.