Published : 09 Oct 2019 02:14 PM
Last Updated : 09 Oct 2019 02:14 PM
'பிக் பாஸ்' நிகழ்ச்சி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. விஜய் தொலைக்காட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார் மதுமிதாவின் கணவர் மோசஸ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த சீசனின் வெற்றியாளராக முகின் ராவ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.
'பிக் பாஸ்' சீசன் 3 இறுதி நாள் நிகழ்வில், இருவரைத் தவிர அனைத்துப் போட்டியாளர்களுமே கலந்து கொண்டார்கள். ஆனால், சரவணன் மற்றும் மதுமிதா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகாமல் இருந்தது.
ஆனால், விஜய் தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' சீசன் 3 இறுதி நாள் ஒளிபரப்பின் போது மதுமிதாவின் கணவர் மோசஸ் அமர்ந்திருப்பது போல் காண்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் காட்சி யாஷிகா நடனமாடி முடித்தவுடன் இடம்பெற்றுள்ளது. இதனால், மதுமிதாவின் கணவர் மட்டும் எப்படி கலந்துகொள்ளலாம் என்று மதுமிதா ஆர்மி தரப்பில் பலரும் கேள்வி கேட்டுள்ளனர். மேலும், அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் குறிப்பிட்டு, கேள்வி எழுப்பினர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மதுமிதாவின் கணவர் மோசஸ் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "'பிக் பாஸ்' சீசன் 3 இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் நானோ, மதுமிதாவோ எங்களது குடும்பத்தினரோ யாருமே கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால் எங்களை யாருமே அழைக்கவில்லை.
நான் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. நானும் அந்த நிகழ்ச்சியை இப்போது பார்த்தேன். நான் கலந்துகொண்டது போல ஒரு காட்சியைப் போட்டுள்ளார்கள். ஏன் இப்படிச் செய்தார்கள் எனத் தெரியவில்லை. ஏன் இப்படிப் பண்ணினார்கள் என்று அதிர்ச்சியாக இருந்தது. இதை அவர்கள் செய்திருக்கக் கூடாது. இது மிகவும் தவறு. இதற்கு அவர்கள் சரியான விளக்கம் தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் மோசஸ்.
இதன் மூலம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதற்கு விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளிக்குமா என்பது விரைவில் தெரியவரும். மேலும், மதுமிதாவுக்கு எப்படி அழைப்பு இல்லையோ, அதே போல் சரவணனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
@madhumithamoses #BigBossTamil3 Finals ஏன் நான் கலந்து கொண்டதாக காட்டினார்கள்? @vijaytelevision #Madhumitha pic.twitter.com/zWkItzD5BT
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT