

சூரியை நாயகனாக்க முடிவு செய்தது ஏன் என்று இயக்குநர் வெற்றிமாறன் விளக்கமளித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தாணு தயாரித்துள்ளார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்புப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
'அசுரன்' படத்தைத் தொடர்ந்து, சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். சூரியை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தது ஏன் என்று இயக்குநர் வெற்றிமாறன் விளக்கமளித்துள்ளார்.
அதில், "’வடசென்னை 2’ ஆரம்பித்தால் அது இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். அதற்கு முன் ஒரு எளிமையான படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது கண்டிப்பாக இந்தத் தேதியில் இப்படித்தான் வெளியிட வேண்டும் என்ற அழுத்தமெல்லாம் இல்லாத ஒரு படமாக இருக்க வேண்டும்.
நா.முத்துகுமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்ட கதையைப் படமாக எடுக்கிறேன். இறந்து போன ஒரு தாத்தாவின் இறுதிச் சடங்கு பற்றிய கவிதை அது. இதில் சூரி நாயகனாக நடிக்கிறார். இந்த கதையின் கதாபாத்திரத்துக்கு அவர் மிகவும் பொருத்தமாக இருப்பார். அவரிடம் ஒரு எளிமையும் அப்பாவித்தனமும் இருக்கிறது. அது இந்தக் கதைக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.