

சிலருக்கு சிம்புவை வைத்துப் படம் எடுக்கத் தெரியவில்லை என்று 'தொட்டி ஜெயா' இயக்குநர் வி.இசட்.துரை தெரிவித்துள்ளார்.
சிம்பு, கோபிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தொட்டி ஜெயா'. வி.இசட். துரை இயக்கத்தில் உருவான இந்தப் படம் 2005-ம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் 2-ம் பாகம் வெளியாகுமா என்று அவ்வப்போது வி.இசட். துரையிடம் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
தற்போது, சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள 'இருட்டு' படத்தை இயக்கியுள்ளார் வி.இசட்.துரை. அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதில் சிம்பு தொடர்பாக சமீபத்தில் நிலவு சர்ச்சைகள் குறித்து வி.இசட்.துரையிடம் கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், "பார்த்துட்டுதான் இருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும் சிம்பு ஒரு நல்ல நடிகர். ‘தொட்டி ஜெயா’ படம் சமயத்துல எங்களுக்கு அவரால எந்தப் பிரச்சினையும் வரல. அவரைச் சரியா பயன்படுத்தி படமெடுக்க இங்கே சிலருக்குத் தெரியல. அவரை வச்சு மணிரத்னம், சுந்தர்.சி எல்லாம் படம் பண்ணலையா?
பொத்தாம் பொதுவா சிம்பு மேல மட்டும் தப்பு சொல்லிட முடியாது. சீக்கிரம் சிம்புவை வச்சு ஒரு படம் பண்ணப் போறேன். அதற்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. ரசிகர்கள் பல பேர் ‘தொட்டி ஜெயா - 2’ வருமானு கேட்டுட்டு இருக்காங்க. சிம்புவை வைச்சு எடுக்கப்போற படத்துக்கு அப்புறமா ‘தொட்டி ஜெயா - 2’ படத்துக்கான வேலையை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்" என்று தெரிவித்துள்ளார் வி.இசட்.துரை.