சிவாஜி பிறந்தநாளை உதாசீனப்படுத்திய நடிகர்கள்:  நடிகர் சங்கத்தைச் சாடும் சிவாஜி சமூக நலப்பேரவை

சிவாஜி பிறந்தநாளை உதாசீனப்படுத்திய நடிகர்கள்:  நடிகர் சங்கத்தைச் சாடும் சிவாஜி சமூக நலப்பேரவை
Updated on
1 min read

சிவாஜி பிறந்த நாள் விழா தொடர்பாக நடிகர் சங்கத்தைக் கடுமையாக சாடியுள்ளது சிவாஜி சமூக நலப்பேரவை.

இன்று தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாளாகும். இதற்காகச் சிவாஜி குடும்பத்தினர், தமிழக அரசு மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

நடிகர் சங்கம் கொண்டாட்டத்தின் போது நடிகர் ஜுனியர் பாலையா, அஜய்ரத்தினம், மற்றும் சங்க பொது மேலாளர் பாலமுருகன் மட்டுமே கலந்து கொண்டனர். முன்னணி சங்க உறுப்பினர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. இதற்குச் சிவாஜி சமூக நலப்பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், "சிவாஜி அவர்களின் 91-வது பிறந்தநாளான இன்று தமிழகம் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடிய வேளையில். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மட்டும் இதனைக் கொண்டாட நேரமில்லை.

ஏற்கனவே. ஜுலை 21-ம் தேதி சிவாஜியின் நினைவுநாள் என்பதையே நடிகர் சங்கம் மறந்துபோனது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெற்று முடிவிற்காகக் காத்திருந்தாலும் ஏற்கனவே பொறுப்பில் இருப்பவர்கள் அதே பதவிகளில் தொடர்வதாகத்தான் அர்த்தம். அவர்களுக்கும் சரி, புதிதாகப் பொறுப்பிற்கு வரத் துடித்துப் போட்டியிட்டவர்களுக்கும் சரி. கலைத்தாயின் தலைமகனின் பிறந்தநாள் நினைவிற்கு வராமல் போனது தமிழகத்தின் கலைத்துறைக்கே ஏற்பட்ட துரதிருஷ்டம் தான்.

நடிகர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்களுக்கு எக்கச்சக்க பணிகள் இருந்திருந்தால், முக்கிய கலைஞர்கள், மூத்த நடிகர்களை மாலை அணிவித்து மரியாதை செய்யப் பணித்திருக்கலாம். ஆனால், யாரோ இருவரைப் பெயருக்கு அனுப்பி மாலை அணிவிக்கச் செய்திருப்பதற்காக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். உலகளவில் தமிழ் சினிமாவை உயர்த்திய, சிவாஜி பிறந்தநாளை உதாசீனப்படுத்திய நடிகர்கள், கலைஞர்களைத் தமிழ் சமூகம் மன்னிக்காது

தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்றி, தமிழ் நடிகர்கள் சங்கம் என்று பெயரிட்டாலாவது, தமிழகம் ஈன்றெடுத்த சிவாஜி அவர்களைக் கொண்டாடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது தமிழ் நெஞ்சங்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

இவ்வாறு சிவாஜி சமூக நலப்பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in