திரையரங்கு உரிமையாளர்களுக்கு பார்த்திபன் உருக்கமான வேண்டுகோள்

திரையரங்கு உரிமையாளர்களுக்கு பார்த்திபன் உருக்கமான வேண்டுகோள்
Updated on
2 min read

'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் தொடர்பாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பார்த்திபன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள அனைத்துக் கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

இந்தப் படத்துக்கு இப்போது தான் மக்களின் வருகை அதிகரித்துள்ளது. தற்போது இது தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''என்னுடைய 'ஒத்த செருப்பு சைஸ் 7' மிகப்பெரிய தயாரிப்பாளர் எடுத்த படமல்ல. விளையாடிக் கொண்டு, சூதாடிக் கொண்டு எடுத்த படமும் அல்ல. ஒரு நிஜமான, தூய்மையான, நேர்மையான கலைஞன் படமெடுக்கப் பணம் இருக்கிறதா, இல்லையா என்பதை விட என்னிடம் உள்ள திறமையை எல்லாம் வைத்து, கஷ்டப்பட்டு கடன் வாங்கி ஒரு நல்ல சினிமாவை எடுத்துள்ளேன்.

இந்த நல்ல சினிமாவை நாலு பேர் பார்க்கிற படமாக மட்டுமில்லாமல், ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் இருப்பதால் தான் 4-வது நாளைக் கூட அழகாகக் கடந்துள்ளது. முதல் நாள் 10-15 பேர் தான் திரையரங்குகளில் இருந்தார்கள். 2-வது நாள் படம் நல்ல பிக்-அப்பாகி விட்டது.

நேற்று (செப்டம்பர் 23) திங்கட்கிழமை வேலைநாளில் கூட 12 பேர் பார்த்த திரையரங்குகளில் எல்லாம் 60 பேர் வந்துள்ளனர். ஒரு படம் பிக்-அப் ஆவதற்கு அந்தக் காலத்திலிருந்தே கொஞ்சம் நேரம் தேவை. இந்தப் படம் இப்போது தான் பிக்-அப்பாகியுள்ளது.

திங்கள், செவ்வாய், புதன் என அப்படியே ஏறும். வெள்ளிக்கிழமை வேறு படங்கள் வருகின்றன. ஆகையால் இந்தப் படத்தை உங்கள் குழந்தையாக எடுத்துக் கொண்டு, நண்பருடைய படம், உங்களுடைய படமாக நினைத்துக் கொள்ளுங்கள். இம்மாதிரியான கனவுப் படம் எப்போதாவது தான் வரும்.

இம்மாதிரியான படங்களுக்கு முதல் வாரம் பெரிதாக இருக்காது. அடுத்ததாக 3 படங்கள் வரும் போது, திரையரங்கு உரிமையாளர்களின் சூழல் தெரியும். ஆகையால், இந்தப் படத்துக்குக் கொஞ்சம் காட்சிகள் கொடுத்து, இன்னும் ஒரு வாரத்துக்குத் திரையிடுங்கள். இப்போது இருக்கும் திரையரங்குகளை அப்படியே கொடுத்துவிட்டீர்கள் என்றால், அதில் ஒவ்வொரு காட்சியை வேண்டுமானால் கட் பண்ணிக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு வகையில் 2-ம் வாரமும் இந்தப் படமும் தாக்குப்பிடிக்க வேண்டும்.

நான் யாருக்குமே எதிரியல்ல. இந்தப் படத்தில் மூன்றாம் நபரின் பணமே கிடையாது. பணம் வந்தாலும் எனக்குத் தான், போனாலும் எனக்குத் தான். படத்தைப் பாருங்கள், அப்போது தான் இந்த மாதிரியான படமெல்லாம் 2-ம் வாரம் தான் பிக்-அப்பாகும் எனத் தெரியும். அது 'அன்னக்கிளி' ஆகவே இருந்தாலும் சரி தான்.

உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். படத்தில் விஷயமுள்ளது என்பது மக்களுக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது. இப்போது தான் வர ஆரம்பித்துள்ளனர். ஆகையால், அதற்காகக் கொஞ்சம் திரையரங்குகள் ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த வாரமும் கூட்டம் குறைவாக இருந்தது என்றால், அப்புறமாக நீங்கள் படத்தை எடுத்துவிடலாம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் கூட்டம் நன்றாகவுள்ளது. மீதமுள்ள திரையரங்குகளில் சுமாராகவுள்ளது.

கொஞ்சம் நோஞ்சானாக இருக்கும் ஒருவனை அடித்து வீழ்த்தாமல், அவனுக்கான வாய்ப்பைக் கொஞ்சம் கொடுக்குமாறு ரொம்ப அன்போடு, தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் என் இருப்பை இங்கு பதிவு செய்ய முடியும். மக்களிடம் ஒரு நல்ல படத்தைப் பார்க்க வைக்கப் போராடி வருகிறேன். திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் நாம் படம் பார்க்கவில்லை என்றால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியும்.

ஆகையால், என்னோட அன்பான அறிவான திறமையான மக்கள் விரும்பக் கூடிய குழந்தையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். தயவுசெய்து அதற்கு இன்னும் உயிர் கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்''.

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in