

பிக் பாஸ் சீசன் 4 தொகுப்பாளராகவும் கமல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. இதன் 2 சீசன் முடிவடைந்து, தற்போது 3-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. தற்போது கவின், சேரன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் மற்றும் முகின் ஆகியோர் இறுதிப் போட்டியில் உள்ளனர்.
தற்போது அடுத்த போட்டியின் தொகுப்பாளர் யாராக இருக்கும் என்று பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகின. சரத்குமார், சூர்யா மற்றும் சிம்பு ஆகியோர் பெயர்கள் தொகுப்பாளர்களாக அடிபட்டது. இதில் சிம்பு தான் இருப்பார் என்று அவரது ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.
இந்தச் செய்தி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சி "அடுத்த சீசனுக்கு கமல் தான் தொகுப்பாளர். வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை. வேறு யாரையும் தொகுப்பாளராகக் கொண்டு வரும் எண்ணமுமில்லை" என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிக் பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தமிழில் நடத்த விஜய் தொலைக்காட்சி 5 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுள்ளது. 3 ஆண்டுகளுமே கமலே தொகுத்து வழங்கினார். தற்போது 4-ம் ஆண்டுக்கும் கமலே தொகுப்பாளர் என விஜய் தொலைக்காட்சி உறுதி செய்திருப்பது நினைவு கூரத்தக்கது.