

சமூக வலைதளத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று 'பிகில்' படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே, தீபாவளி வெளியீடு என்று அறிவித்தது படக்குழு.
ஆனால், இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இதனால், 'பிகில்' படம் முன்பே வெளியாகும் என்று தகவல் வெளியானது. இதனால் சமூக வலைதளத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் பலருமே அக்டோபர் 24-ம் தேதி சரியான தேதியாக இருக்கும் என்று ட்வீட் செய்தனர்.
இதன் மூலம் 'பிகில்' படம் அக்டோபர் 24-ம் தேதி வெளியாகும் எனத் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து 'பிகில்' படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பதிவில், "தயவுசெய்து பட வெளியீட்டுத் தேதி குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம். தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்.
பட வெளியீட்டுக்குப் பொருத்தமான தேதி தேர்வு செய்யப்பட்டு, அது வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தும். எங்களை நம்புங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
'பிகில்' இசை வெளியீட்டு விழா நாளை (செப்.19) காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்