

ஆமிர்கான் படத்தில் யோகி பாபு நடிப்பதாக வெளியான செய்திக்கு திரையுலகினர் மறுப்பு தெரிவித்தார்கள்.
ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்'. இதன் இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெற்றது. இறுதியில் அதில் ஆமிர் கான் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதில் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாகத் தொடங்கியுள்ளது.
'லால் சிங் சட்டா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆமிர் கானுடன் நடிக்கவுள்ளதை விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார். 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தில், பப்பா என்ற கதாபாத்திரத்தில் மைகெல்டி வில்லியம்சன் என்ற நடிகர் நடித்திருந்தார். அதில் தான் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது இந்தப் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. இது தொடர்பாக விசாரித்த போது, இந்தப் படத்தில் முதலில் நடிக்க யோகி பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தக் கதாபாத்திரம் கொஞ்சம் சீரியஸாக இருக்கும் என்பதாலேயே விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்று திரையுலகினர் விளக்கம் தெரிவித்தனர்.
மேலும், மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஆமிர் கான் நடிக்கவுள்ளது நினைவுகூரத்தக்கது.