Published : 14 Sep 2019 04:33 PM
Last Updated : 14 Sep 2019 04:33 PM

மக்களிடையே ஒற்றுமையைக் குலைக்கும் செயல்: அமித் ஷாவின் கருத்துக்கு பா.இரஞ்சித் காட்டம்

மக்களிடையே ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என்று ஒரே மொழி தொடர்பான அமித் ஷாவின் கருத்துக்கு இயக்குநர் பா.இரஞ்சித் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இந்தி மொழி அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் உள்ள இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14-ம் தேதியான இன்று இந்தி நாள் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ட்விட்டரில் இந்தியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “இந்தியா பல்வேறு விதமான மொழிகளைக் கொண்டது. ஒவ்வொரு மொழிக்கும் சொந்த முக்கியத்துவம் இருக்கிறது.

ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால், அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார் அமித்ஷா.

அமித் ஷாவின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது அமித் ஷாவின் கருத்து குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில், "நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றை மொழியை (இந்தி)திணிப்பது என்பது மக்களிடையே ஒற்றுமையைக் குலைக்கும் செயலாகும். மத்திய அரசு மக்களின் அசலான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் பா.இரஞ்சித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x