

'எனை நோக்கிப் பாயும் தோட்டா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பதால் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகிறது.
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கம், பைனான்ஸியர்கள் எனப் பலரும் உட்கார்ந்து பேசியதால், அப்படத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படக்குழு முடிவெடுத்தது.
'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தை வெளிக் கொண்டுவருவதற்காகப் பேசிய பலரும், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தைத் தயாரித்துள்ள அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு தொலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுத்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வெளியாகிறது. அதிலிருக்கும் பிரச்சினையிலிருந்து கவுதம் மேனன் வெளியே வர வேண்டும். ஆகையால் அந்தப் படம் தனியே வந்தது என்றால், கொஞ்சம் தப்பித்துக் கொள்வார் என்று கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது படத்தை செப்டம்பர் 12-ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்தது.
ஒரு வேளை திட்டமிட்டபடி 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியாகவில்லை என்றால், செப்டம்பர் 6-ம் தேதியே வந்துவிடலாம் என்றும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படக்குழு திட்டமிட்டது. இதற்காகவே தங்களுடைய விளம்பரங்களில் வெளியீட்டுத் தேதியை இறுதி செய்யாமல் அதிவிரைவில் 'சிவப்பு மஞ்சள் பச்சை’என்று விளம்பரம் செய்துவந்தது.
தற்போது 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பதால் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.