

'அவள்' இயக்குநர் மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்கவுள்ளது.
சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அவள்'. சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017-ம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து 'அவள் 2' படத்தின் பணிகளைக் கவனித்து வந்தார். அந்தப் படத்தின் பணிகள் தள்ளிப் போனதால், தனது புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்தார். இதன் கதையைக் கேட்டுவிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவனே தயாரிக்க முன்வந்துள்ளார். இதன் முதற்கட்டப் பணிகளான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பைச் செப்டம்பர் மாதத்தில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
'ஐரா', 'மிஸ்டர் லோக்கல்', 'கொலையுதிர் காலம்' ஆகிய படங்களின் தோல்வியால், எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் நயன்தாரா. அதற்குப் பிறகு மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.