

'மாநாடு' படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு, புதிய பரிமாணத்தில் தொடங்கப்படுவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. நீண்ட நாட்களாக முதற்கட்டப் பணிகளிலேயே இருந்து வருகிறது. மே மாதம் படப்பிடிப்பு, ஜூன் மாதம் படப்பிடிப்பு என அறிவிப்புகள் வந்தாலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது.
இதனிடயே வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வேண்டும், மாதத்தில் 15 நாட்களில் படப்பிடிப்பு என பல்வேறு கண்டிஷன்களை சிம்பு வைப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் எந்தவொரு தகவலையுமே வெளியிடாமல் இருந்தனர்.
தற்போது சிம்பு தாய்லாந்தில் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். அவர் வந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மிக மிக வருத்தத்துக்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்தார். தன்னை வைத்து 'மாநாடு' படத்தை எடுக்க என்னைத் தூண்டி, துணைநின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது, நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்தத் தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால், எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்கவில்லை.
அதனால் சிம்பு நடிக்கவிருந்த 'மாநாடு' படத்தினை கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வெங்கட் பிரபு இயக்க 'மாநாடு' படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்” என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.