

’கென்னடி கிளப்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீட்டிலிருந்து, ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு மாற்றியமைத்துள்ளது படக்குழு.
கிராமத்து இளைஞர்களின் வாழ்வில் கபடி எப்படிக் கலந்திருக்கிறது என்பதை உண்மையும் நேர்மையுமாக 'வெண்ணிலா கபடி குழு'வில் பதிவு செய்தவர் சுசீந்திரன். தற்போது பெண்கள் கபடியை மையப்படுத்தியும் விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழலை மையமாக வைத்தும் 'கென்னடி கிளப்' படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தப் படம் முதலில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால், 'நேர்கொண்ட பார்வை' படத்தை இரண்டாம் வாரத்திலும் சில திரையரங்குகள் திரையிடுவார்கள். மேலும், அன்றைய தினம் 'கோமாளி' திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதனால், திரையரங்குகள் குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால், வெளியீட்டை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
'கென்னடி கிளப்' படத்தில் பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி மற்றும் நிஜ கபடி வீராங்கனைகள் நடித்துள்ளனர். நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, முன்பு இயக்கி வந்த 'ஏஞ்சலினா', 'சாம்பியன்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் சுசீந்திரன். இதைத்தவிர புதிய படத்திற்கு கதை ஒன்றையும் எழுதி வருகிறார்.