முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருக்கும்: விஜய் சேதுபதி

முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருக்கும்: விஜய் சேதுபதி
Updated on
1 min read

முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குச் சவாலாக இருக்கும் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நடசத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படமொன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தற்போது, தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு, முத்தையா முரளிதரன் பயோபிக்கில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு  இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு, 2020-ம் ஆண்டு இறுதியில் வெளியிடலாம் என இப்போதைக்கு முடிவு செய்துள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கவுள்ளது தொடர்பாக விஜய் சேதுபதி, “தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, சர்வதேச அளவில் முத்திரை பதித்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. 

முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குச் சவாலாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். முரளியே இந்த படத்தில் இணைந்து பணியாற்றி, கிரிக்கெட் குறித்து என்னை வழிநடத்தவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு, முரளிதரனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in