Published : 21 Jul 2019 03:54 PM
Last Updated : 21 Jul 2019 03:54 PM

’வசந்தமாளிகை’யில் ஜெயலலிதா - சிவாஜி நினைவுநாள் இன்று! 

நடிகர் திலகம் சிவாஜியின் நினைவு தினம் இன்று. இந்தநாளில், அவரின் சாதனைகளை அறிந்து, உணர்ந்து பெருமிதம் கொள்வோம். 

81.  1962-ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பலே பாண்டியா’. இந்தப் படத்தில் தனது காட்சிகளை 11 நாட்களில் நடித்து முடித்துக் கொடுத்தார் சிவாஜி. இதற்காக தினமும் அவர்  20 மணிநேரம் தொடர்ந்து உழைத்தார் !

82. மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி கணேசனுக்கு  மே 1 என்பது கூடுதல் சிறப்புமிக்கதாகும். 

ஆம் 1952-ம் ஆண்டு மே 1-ம் தேதி, வியாழக்கிழமை காலை 9 மணியளவில் சிவாஜிக்கும் கமலாம்மாளுக்கும்  சுவாமிமலையில் திருமணம் நடைபெற்றது.   சிவாஜியின் அக்காள் மகள்தான் கமலம்மாள். அதாவது - சிவாஜியின் பெரியம்மா மாணிக்கத்தம்மாவின் பேத்தி.

83. சிவாஜி பிறந்த சமூகத்துக்கும் 333 பட்டப் பெயர்கள் உண்டு. இதில் சிவாஜியின் குடும்பத்து பட்டப்பெயர்  ‘மன்றாயர்’ என்றழைக்கப்பட்டது!

84. சிவாஜியின் முதல் படம் : பராசக்தி (1952)

100-வது படம் : நவராத்திரி

125வது படம் : உயர்ந்தமனிதன்

150-வது படம் : சவாலே சமாளி

200-வது படம் :திரிசூலம்

250-வது படம் : நாம் இருவர்

கடைசிப் படம் (288-வது படம்) : பூப்பறிக்க வருகிறோம் (1999)

85. சிவாஜி கணேசனை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர்களில் முதன்மையானவர் ஏ.சி.திருலோகச்சந்தர். இவர் சிவாஜியை வைத்து 20 படங்கள் இயக்கியுள்ளார்.  அவருக்கு அடுத்து டி.யோகானந்த் - 19 படங்கள். ஏ.பீம்சிங் - 18 படங்கள், சி.வி.ராஜேந்திரன் - 16 படங்கள், பி.ஆர்.பந்துலு- 13 படங்கள்ம, பி.மாதவன் - 13 படங்கள், ஏ.பி.நாகராஜன்  -12 படங்கள் சிவாஜியை வைத்து இயக்கியுள்ளார்!

86. பெருந்தலைவர் காமராஜர் கடைசியாக பார்த்த திரைப்படம், சிவாஜி கணேசன் வாஞ்சி நாதனாக சிறப்பு வேடத்தில் நடித்த  ‘சினிமா பைத்தியம்’ படம்தான். அதேபோல்  காமராஜர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி - சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழாதான்!

87. ‘வசந்த மாளிகை’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் ஜெயலலிதாதான்.  அவரது தாயார் சந்தியாவின் திடீர்  மரணம் காரணமாக ஜெயலலிதா இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகுதான் சிவாஜிக்கு ஜோடியாக வாணிஸ்ரீ நடிக்க ஒப்பந்தமானார்!

89.  ‘மலைக்கள்ளன்’ படத்தில் முதலில் சிவாஜிதான் நடிப்பதாக இருந்தது.  நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய ‘மலைக்கள்ளன்’ நாவலை  திரைப்படமாக எடுக்க, கோவை பட்சி ராஜா பிக்சர்ஸ் அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு தயாரிக்க முடிவு செய்து, அதில் சிவாஜி கணேசனை நடிக்க வைக்க முயற்சித்தார். 

அந்த  சமயத்தில் சிவாஜியின் கையில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் இருந்ததால்... அவரால் ‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிக்க முடியாமல்  போனது. அதன் பிறகுதான் அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். எம்.ஜி.ஆருக்கு அந்த வாய்ப்பை வாங்கித் தந்தவரே சிவாஜிதான்!

90.  தமிழகத்தில் மிக உயரமான கட்-அவுட் முதன்முதலாக சிவாஜி படத்துக்குத்தான் வைக்கப்பட்டது தெரியும்தானே. சென்னையில் சித்ரா தியேட்டர் வாசலில் ‘வணங்காமுடி’ திரைப்படத்துக்குத்தான் முதன்முதலில் 80 அடியில் கட்-அவுட் வைக்கப்பட்டது. அதற்கு முன்பு எந்த ஒரு நடிகருக்கும் தமிழகத்தில் கட்-அவுட் வைக்கவே இல்லை!

தொகுப்பு : மானா பாஸ்கரன்  
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x