

அட்லீயின் உதவி இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் அட்லீ மற்றும் 'வீரம்' சிவா ஆகியோரது படங்களில் தொடர்ச்சியாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜூலை 17ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
தற்போது 'ரஜினி முருகன்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தனது அடுத்த படத்துக்காக பலரிடம் கதைகளை கேட்டு வந்த சிவகார்த்திகேயன், தற்போது தனது அடுத்த 3 படங்களின் இயக்குநர்களை முடிவு செய்திருக்கிறார்.
முதலில் அட்லீயின் இணை இயக்குநர் பாக்யராஜ் படத்தில் நாயகனாக நடித்து, படத்தை தானே தயாரிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, இயக்குநர் சிவா ஆகியோரது படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அட்லீ மற்றும் சிவா ஆகியோரது படங்களின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
விஜய் படத்தை இயக்கவிருக்கும் அட்லீ, அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருக்கிறார். அதே போல தற்போது அஜித்தை இயக்கி வரும் சிவா, அப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருக்கிறார். சிவா இயக்கவிருக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி நடிக்க இருக்கிறார்.