

‘மணிரத்னம் இயக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படம் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகஸ்தர் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் துல்ஹர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் ‘ஒ காதல் கண்மணி' படத்தை ஏப்ரல் 17-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகஸ்தர் மன்னன் ஒரு மனுவைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
‘கடல்' படத்தின் விநியோக உரிமையை வாங்கியதன் மூலம் நான் பலகோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளேன். அதற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டக்கூட முடியாமல் இருக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் தற்போது பெரிய நிறுவனங்கள் படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் அதற்கு நஷ்டஈடு வழங்கி வருகின்றனர்.
எனவே தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு தற்போது வெளியாக வுள்ள 'ஓ காதல் கண்மணி' பட வெளியீட்டுக்கு முன் எனக்கு நஷ்ட ஈட்டு தொகையை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.