

யுவராஜ் இயக்கத்தில் மீண்டும் வடிவேலு நடித்து வரும் 'எலி' படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'தெனாலிராமன்' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் நாயகனாக நடிக்க திட்டமிட்டார் நடிகர் வடிவேலு. இயக்குநர் யுவராஜ் கூறிய கதை பிடித்துவிடவே மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்துக்கு 'எலி' என்று தலைப்பிட்டார்கள்.
1960களின் பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை ஜி.சதிஷ் குமார் தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இரவுபகலாக இடைவிடாமல் நடைப்பெற்று வருகிறது.
பின்னி மில் வளாகத்தில் அமைக்க பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரம்மாண்டமான வீடுகளின் உள்கட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் 'எலி' படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து மே மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
ஒரு கொள்ளைக் கூட்டத்தை கண்டுபிடிக்க உளவாளியாக அக்கூட்டத்துக்குள் நுழைகிறார் வடிவேலு. அங்கு அவர் படுகிற அவஸ்தைகளையும், சாகசத்தையும் காமெடி கலந்து சொல்ல வரும் படம் தான் 'எலி' என்பது குறிப்பிடத்தக்கது.