அஜித்தின் 32 மணி நேர டப்பிங்: கெளதம் மேனன் வியப்பு

அஜித்தின் 32 மணி நேர டப்பிங்: கெளதம் மேனன் வியப்பு
Updated on
1 min read

'என்னை அறிந்தால்' படத்திற்காக தொடர்ச்சியாக 32 மணி நேரம் அஜித் டப்பிங் பேசியதாக இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்தார்.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், பார்வதி நாயர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்' படத்தை இயக்கி இருக்கிறார் கெளதம் மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.

பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, பிறகு பணிகள் முடிவடையாத காரணத்தால் தற்போது பிப்ரவரி 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதன்முறையாக 'என்னை அறிந்தால்' படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

அச்சந்திப்பில் இயக்குநர் கெளதம் மேனன் பேசியது:

“நிறைய பேர் பார்க்காத அஜித்தை இப்படத்தில் காட்டியிருக்கிறேன். அனைவருமே குடும்பத்தோடு இப்படத்தை பார்க்கலாம். உங்களுக்கு ஏற்றமாதிரி சில காட்சிகள் எல்லாம் வைக்கலாம்னு இருக்கேன் என்று சொன்னேன். உங்களுக்கு எது சரினு படுதோ அதை செய்யுங்கள். உங்க ஸ்டைலிலேயே படம் இருக்கட்டும் என்று சொன்னார் அஜித்,.

இதுவரைக்கும் 14 படங்கள் இயக்கி இருக்கிறேன். நான் இயக்கிய படங்களில் இந்தப் படத்தை என்னோட பெஸ்ட் படம்னு சொல்வேன். பெண்களுக்கு இந்தப் படம் ரொம்பவும் பிடிக்கும். இது ஒரு எமோஷனலான ஆக்ஷன் த்ரில்லர்.

அஜித் சார் இதுல 25 வயசுல இருந்து 40 வயசு வரைக்கும் வர்ற தோற்றங்கள்ல நடித்திருக்கிறார். இதுக்காக ஸ்பெஷல் மேக்கப் எல்லாம் போடவில்லை. யதார்த்தமா ஒருத்தர் எப்படி அந்தந்த காலகட்டங்களில் இருப்பாரோ, அப்படித்தான் அஜித் தன்னை மாற்றிக் கொண்டார்.

இப்படத்திற்காக தொடர்ந்து 32 மணி நேரம் அஜித் டப்பிங் பேசினார். இப்படத்தில் அஜித்திற்கு அவ்வளவு ஈடுபாடு. இப்படத்தோட கதை என்னவென்று முழுமையாக சொல்ல முடியாது. க்ரைம், கேங்ஸ்டர், போலீஸ், டான்சராக இருக்கிற ஒரு பெண், மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிற ஒரு பெண், ஒரு வில்லன் இவர்களைச் சுற்றி நடக்குற விஷயங்கள் தான் படத்தோட கதை.

இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு கிடைத்தால், இப்படத்தின் இரண்டாம் பாகம் பண்ணனும் என்ற ஆசையும் இருக்கிறது." என்று தெரிவித்தார் கெளதம் மேனன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in