Last Updated : 13 Jan, 2015 10:53 AM

 

Published : 13 Jan 2015 10:53 AM
Last Updated : 13 Jan 2015 10:53 AM

தமிழ் சினிமா மாறிக் கொண்டிருக்கிறது: நடிகர் விக்ரம்

தமிழ் சினிமா மாறிக் கொண்டிருப்பதாகக் கூறும் நடிகர் விக்ரம், அந்த மாற்றத்தில் முக்கியப் பங்களிப்பாக தாம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' இருக்கும் என்றார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா, 'முண்டாசுப்பட்டி' ராமதாஸ் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் '10 எண்றதுக்குள்ள'.

'ஐ' வெளியாகும் சூழலில், இப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது. '10 எண்றதுக்குள்ள' படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்கிறார் விக்ரம். படம் குறித்து விக்ரமிடம் பேசினேன்.

'' 'கோலிசோடா' படம் பார்த்து நான் பிரமித்துப் போய்விட்டேன். ரசிகர்கள் அந்த அளவு படத்தைக் கொண்டாடியதற்கான அர்த்தம் புரிந்தது. விஜய் மில்டனை போனில் அழைத்துப் பாராட்டினேன்.

உங்களுக்கு என்கிட்ட கதை இருக்கு சார் என விஜய் மில்டன் சொன்னார். நேரில் வரவழைத்து கதையைக் கேட்டேன். ரொம்பப் பிடித்திருந்தது. சூப்பர் நல்லாயிருக்கு. இது கோலி சோடா மாதிரி இல்லையே. வேற மாதிரி இருக்குன்னு சொன்னேன். இன்னும் இதுமாதிரி பல கதைகள் இருக்கு என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.

தமிழ் சினிமா வேற மாதிரி மாறிட்டு இருக்கு. அதுல '10 எண்றதுக்குள்ள' முக்கிய பங்களிப்பு தரும் படம். இது ஒரு த்ரில்லர் கதை. கதையைச் சொன்னால் படம் பார்க்கிற சுவாரஸ்யம் போய்விடும். படத்தில் நான் லாரி டிரைவர் இல்லை. கமர்ஷியலும், யதார்த்தமும் கலந்த கலவைதான் படம்.

படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒரு பாடல் காட்சி, கிளைமாக்ஸ் எடுத்தால் படம் முடிந்துவிடும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் ஆகும். நிச்சயம் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். இதை அடுத்து, மீண்டும் விஜய் மில்டனுடன் இணைய பேசிக்கொண்டு இருக்கிறேன்'' என்றார் விக்ரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x