Last Updated : 08 Jul, 2019 12:04 PM

 

Published : 08 Jul 2019 12:04 PM
Last Updated : 08 Jul 2019 12:04 PM

முதலில் தமிழ்ப் படம்; பின்பு இந்தியில் பிர்சா முண்டா: இயக்குநர் பா.இரஞ்சித் திட்டம்

முதலில் தமிழ்ப் படமொன்றை இயக்கிவிட்டு, பின்பு இந்தியில் பிர்சா முண்டா வாழ்க்கையைப் படமாக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களுக்குப் பிறகு ரஜினியை வைத்து ‘கபாலி’ மற்றும் ‘காலா’ என இரண்டு படங்களை இயக்கியவர் பா.இரஞ்சித். தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இடையே, நமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவுள்ள படத்துக்காக, முதற்கட்டப் பணிகளைத் தொடங்கினார். மேலும், தமிழில் '2-ம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தையும் தயாரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மேலும் 2 படங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்திய படத்தின் பணிகள் தாமதமாவதால், தான் எழுதி வைத்திருந்த பாக்சிங் சம்பந்தப்பட்டக் கதையொன்றைத் தமிழில் இயக்கவுள்ளார் பா.இரஞ்சித்.

இதற்காக ஆர்யா, சத்யராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு நாயகருக்காக பல்வேறு முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பா.இரஞ்சித். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

முதலில் ஆர்யா கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்தியைத்தான் அணுகியுள்ளார் பா.இரஞ்சித். ஆனால், பல்வேறு படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருப்பதால், உடனே தேதிகள் இல்லை என்று கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்தே ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x