’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் கமல்; ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் சுரேஷ்: இயக்குநர் பி.வாசு பேட்டி

’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் கமல்; ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் சுரேஷ்: இயக்குநர் பி.வாசு பேட்டி
Updated on
1 min read

‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. அதேபோல், ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில், சுரேஷ்தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது என்று இயக்குநர் பி.பாசு தெரிவித்தார்.

இயக்குநர்கள் சந்தான பாரதியும் பி.வாசுவும் இணைந்து, ‘பன்னீர் புஷ்பங்கள்’ என்ற திரைப்படத்தை, பாரதி வாசு என்ற பெயரில் இயக்கினார்கள். இதுவே இவர்களின் முதல் படம்.

இந்தப் படம் வெளியாகி 38 வருடங்களாகின்றன (1981 ஜூலை 3ம் தேதி ரிலீசானது). இந்தப் படம் குறித்து, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு, இயக்குநர் பி.வாசு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

சந்தானபாரதியும் கமல்ஹாசனும் நல்ல நண்பர்கள். இருவரும் டுடோரியல் காலேஜில் ஒன்றாகப் படித்தவர்கள். ‘வாடா போடா’ என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நல்ல நண்பர்கள். ‘பன்னீர் புஷ்பங்கள்’ கதையைக் கேட்டார் கமல். அவருக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டது. பலநாள் அவரின் இல்லத்தில் டிஸ்கஷன் நடந்தது. அதேபோல் ரஜினி ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த அறையை டிஸ்கஷனுக்குப் பயன்படுத்திக்கொள்ளக் கொடுத்தார். ஆக, கமல் சார்  வீட்டிலும் ரஜினி சார் ரூமிலும் டிஸ்கஷன் நடந்தது.

அதேபோல், படத்தில் பிரதாப் போத்தன் நடித்த கேரக்டரில், கமல் நடிப்பதாகவும் ஒரு திட்டம் இருந்தது. ஆனால் ஒருநாள் கமல் சார் எங்களிடம், ‘இந்தப் படத்துல நான் பண்ணினா, அது ஹீரோ படமா மாறிடும். இது டைரக்டர்களுக்கான படம். உங்களுக்கு பேர் கொடுக்கக் கூடிய படம். அதனால, நீங்க வேற யாரையாவது வைச்சுப் பண்ணுங்க. முதல் படம் அப்படித்தான் அமையணும். அதான் சரியா இருக்கும்’ என்று சொன்னார். அதன்படி அந்த ஆசிரியர் கேரக்டருக்கு, பிரதாப் போத்தனை ஓகே செய்தோம்.

இதேபோல, சுரேஷுக்கு உடனடியாக நல்ல நல்ல வாய்ப்புகள் வந்தன. தெலுங்கில் மிகப்பெரிய ஸ்டாரானார். தமிழிலும் ஏகப்பட்ட படங்கள் பண்ணினார். அதில் மிக முக்கியமாக, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் முதலில் சுரேஷ்தான் நடிப்பதாக இருந்தது. அவர் ஒருநாள் சென்னையில் காரில் வந்துகொண்டிருந்த போது, முன்னே சென்று கொண்டிருந்த மாட்டுவண்டி, திடீரென தடம் புரண்டது. அப்போது மாடு மிரண்டது. இதில் அங்கிருந்த பெரிய கல் ஒன்று, சுரேஷின் முகத்தில் பட்டு காயத்தைக் கொடுத்தது. அந்தக் காயம் ஆறுவதற்கு நாட்களாகின.  ஆனால், ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தை உடனே எடுக்கவேண்டிய கட்டாயம் இருந்ததால், சுரேஷுக்கு பதிலாக, நடிகர் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இவ்வாறு பி.வாசு தெரிவித்தார்.

இயக்குநர் பி.வாசுவின் பேட்டியைக் காண...

பி.வாசு பேட்டி 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in