Last Updated : 12 Jul, 2019 08:18 PM

 

Published : 12 Jul 2019 08:18 PM
Last Updated : 12 Jul 2019 08:18 PM

முதல் பார்வை: கூர்கா

போலீஸ் ஆக நினைத்து அதில் தோல்வியைச் சந்திக்கும் கூர்கா, போலீஸாரையும் மீறி மக்களைக் காப்பாற்றி அவர்கள் மனதில் நின்றால் அதுவே 'கூர்கா' படத்தின் கதை.

கூர்கா பரம்பரையில் வந்த யோகி பாபு போலீஸ் ஆக தொடர்ந்து முயல்கிறார். ஆனால், அவரிடம் அதற்கான எந்தத் தயாரிப்பும் இல்லாததால் தோல்வியைத் தழுவுகிறார். சென்னையின் மிகப் பெரிய மால் ஒன்றில் செக்யூரிட்டியாகப் பணிபுரிகிறார். தீவிரவாதிகளின் சதித் திட்டத்தால் பொதுமக்கள் அந்த மாலில் பணயக் கைதிகளாக சிறை வைக்கப்படுகின்றனர். போலீஸார் உள்ளே செல்ல முடியாத சூழலில் யோகி பாபு என்ன செய்கிறார், தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடித்தாரா, பொதுமக்களைக் காப்பாற்றினாரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', '100' படங்களை இயக்கிய சாம் ஆண்டனின் 4-வது படம் 'கூர்கா'. யோகி பாபுவை வைத்து முழு நீள காமெடிப் படத்தை எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால், அந்த நகைச்சுவை எடுபடவில்லை என்பதுதான் சோகம்.

சின்ன கேரக்டர் என்றாலும் அழுத்தமாக முத்திரை பதிக்கும் யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரம், நாயகன் என்றால் ஏன் தடுமாறுகிறார் என்று தெரியவில்லை. 'தர்மபிரபு'வில் இருந்த அதே பிரச்சினை 'கூர்கா'விலும் யோகி பாபுவுக்கு தொடர்வது தற்செயல் என்று கடந்து போக முடியவில்லை. வசனங்களில் கூட யோகி பாபு பளிச்சிடவில்லை. நீங்க காமெடியனாகவே இருந்துடுங்க பாபு என்று சொல்ல வைக்கிறது படம்.

சார்லி சில இடங்களில் கடுப்பேத்தினாலும் சில இடங்களில் ஆறுதல் நடிப்பை வழங்கியுள்ளார். ரவி மரியா எரிச்சலை வரவழைக்கிறார். சத்தமான அவரின் பேச்சும் ரியாக்‌ஷன்களும் பொறுமையைச் சோதிக்கின்றன. நரேன் வழக்கமான கமிஷனர் கதாபாத்திரத்தில் வந்து போகிறார். ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன், தேவதர்ஷினி, நமோ நாராயணன் என்று பலரும் படத்தில் இருக்கிறார்கள்.

கிருஷ்ணன் வசந்தின் கேமராவும், ராஜ் ஆர்யனின் பின்னணி இசையும் படத்துக்கு சாதகமான அம்சங்கள். ரூபன் இன்னும் நிறைய கத்தரி போட்டிருக்கலாம்.

போலிச் சாமியார், மிக்ஸர் சாப்பிடும் அரசியல் தலைவர், கையில் கயிறு கட்டிய முதல்வர், டிஆர்பி ரேட்டிங்கில் குறியாய் இருக்கும் சிஇஓ என்று சமகால நிகழ்வுகளை நய்யாண்டி செய்ய முயல்கிறார் இயக்குநர். ஆனால், அது முழுமையடையவில்லை. கூர்காவின் பெருமைகளைச் சொல்வதாய் யோகி பாபுவின் பாட்டி சொல்லும் ஃபிளாஷ்பேக் பரவாயில்லை ரகம்தான். ஆனால், அதையும் கலாய்க்கிறேன் பேர் வழி என்று காலி பண்ணுகிறார் பாபு.

கூர்காவைத் திட்டும் ஓர் அரசியல்வாதி அடுத்த காட்சியில் கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் பின் கூர்காக்களைப் பெருமையாகச் சொல்வதும் பக்கா செயற்கைத்தனம். இயக்குநர் சாம் ஆண்டனுக்கு படத்தை எப்படிக் கொண்டு போவது என்பதில் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் காமெடிப் படமா, சீரியஸ் படமா என்று உணர்த்தாத அளவுக்கு திரைக்கதையில் தடுமாறியிருக்கிறார். காமெடிக் கதையை சீரியஸ் படமாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தும் அதைத் தெரிந்தே தவறவிட்டுள்ளார். மலினமான நகைச்சுவை என்றாலும் பார்ப்பதற்குத் தயார் என்றால் 'கூர்கா'வுக்கு விசில் அடிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x