

தற்போது சன் நெக்ஸ்ட் தொடங்கப்பட்டுள்ளதால், பல்வேறு புதிய, முன்னணி நடிகர்களின் படங்களின் உரிமத்தை கைப்பற்றுவதில் சன் டி.வி., தீவிரம் காட்டி வருகிறது
தமிழக தொலைக்காட்சி நிறுவனங்களில் தனக்கென தனி இடத்தை சன் டிவி பெற்றுள்ளது.
சமீப காலமாக பெரிய நாயகர்களின் படங்கள் போக, எந்தவொரு படத்தையுமே தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்குவதில்லை. படம் வெளியாகி வெற்றியடைந்தவுடன் போட்டி போட்டு வாங்கும் வழக்கம் நிலவி வருகிறது.
அமேசான், நெட் ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியும் சன் நெக்ஸ்ட் என்ற மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் உலகில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதில் சன் குழும தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி உரிமம் உள்ள படங்கள் நல்ல தரத்தில் இடம்பெற்றுள்ளன.
சன் நெக்ஸ்ட் தொடங்கப்பட்டுள்ளதால், பல்வேறு புதிய, முன்னணி நடிகர்களின் படங்களின் உரிமத்தை கைப்பற்றுவதில் சன் குழுமம் தீவிரம் காட்டி வருகிறது.
சிவகார்த்திகேயன் - பொன்.ராம் இணையின் படம், நயன்தாராவின் 'அறம்', பிரபுதேவாவின் 'குலேபகாவலி', செல்வராகவன் - சந்தானம் இணையின் 'மன்னவன் வந்தானடி' மற்றும் சிபிராஜின் 'சத்யா' ஆகிய படங்களின் தொலைக்காட்சி உரிமங்களை சமீபத்தில் கைப்பற்றியுள்ளது.
சன் குழுமத்தின் இந்தத் தீவிரம், டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் முதல் இடத்தை பிடிப்பதற்கான திட்டங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.