

வலி நினைவுகள் எல்லாம் விருது என்கிற மகிழ்ச்சி மூலம் காணாமல் போய் விட்டது . இப்போது புத்துணர்வும் புது பலமும் பெற்றுள்ளதாக உணர்கிறேன் என்று கரண் தெரிவித்துள்ளார்.
2009 - 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2009-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை 'மலையன்' படத்துக்காக கரணுக்கு கிடைத்துள்ளது.
இது குறித்து கரண் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு நடிகருக்கு விருது என்பது பல படிகள் ஏறிச் சென்று உயர்ந்த உணர்வைத் தரும். அந்த வகையில் 'மலையன்' படத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைத்து இருக்கிறது.
அந்தப் படத்தில் நடிக்கும் போது சிரமப் பட்டுப் பல சவால்களைச் சந்தித்து நடித்தேன். அந்த வலி நினைவுகள் எல்லாம் விருது என்கிற மகிழ்ச்சி மூலம் காணாமல் போய் விட்டது . இப்போது புத்துணர்வும் புது பலமும் பெற்றுள்ளதாக உணர்கிறேன்.
அந்தப் படத்துக்காக என்னை சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள தமிழக அரசுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதுக்கு என்னைப் பரிந்துரை செய்தவர்களுக்கும் விருது தேர்வுக் குழுவினருக்கும் என் நன்றி. இவ்விருதுக்கு காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநருக்கும் மனமார்ந்த நன்றிகள். இவ்விருதை படத்தில் பணிபுரிந்த அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்'' என்று கரண் தெரிவித்துள்ளார்.