

லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்தி பாடல்கள் அதிகம் பாடாதது குறித்த சர்ச்சைக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார். "முடிந்ததை சிறப்பாக செய்கிறோம், நேர்மையாக இருக்கிறோம்"என அவர் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் 'நேற்று இன்று நாளை' இசை நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. இதில் இந்தி பாடல்களை விட தமிழ் பாடல்கள் அதிகமாக இடம்பெற்றதால் அதிருப்தியுற்ற இந்தி பேசும் ரசிகர்கள் சிலர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவந்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் பல நட்சத்திரங்களும், ரசிகர்களும் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சை பற்றி ஐஐஎஃப்ஏ (IIFA) நிகழ்ச்சியில் ரஹ்மானிடம் கேட்கப்பட்டது.
அவர் பதிலளிக்கையில், "இவ்வளவு வருடங்களாக மக்கள் எனக்கு தந்து வரும் ஆதரவு எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்களின்றி நான் இல்லை. அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
லண்டன் நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், நாங்கள் எங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தோம். , நேர்மையாக இருக்கிறோம்" என்றார்.
அதேநேரத்தில், அமெரிக்காவில் மெட்லைஃப் மைதானத்தில் நடந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை தந்தனர். ஊர்வசி ஊர்வசி பாடலை தமிழில் பாடச் சொல்லியும் பலர் அவரைக் கேட்டனர். 2 மணி நேரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.