

தமிழ்த் திரைப்படங்களுக்கு இரட்டை வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் என விக்ரமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'நான் யாரென்று நீ சொல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கீர்த்திதரன், கஜேஷ், சுரேகா, சோனா, ஆனந்த் பாபு, பாண்டு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஏ.எம்.பாஸ்கர் இயக்கியுள்ளார். மணிமேகலை தயாரித்துள்ளார்.
இவ்விழாவில் இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் பேசியதாவது:
வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன். மற்ற விஷயங்களைப் பேச மாட்டேன். ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது.
நேற்றும் இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமாவுக்கு பெரும் இழப்பு. ஜி.எஸ்.டி 28 % இது தவிர மாநில வரி 30% இது இல்லாமல் மாநிலம் வசூலிக்கும் வரி 30% க்கு 28% ஜி.எஸ்.டி என தனி வரி என மொத்தம் 65 % வரியாக போனால் எப்படி சினிமா வாழும்.
வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும். ஜிஎஸ்டி கட்ட தயாராக இருக்கிறார்கள். மாநில அரசு தனது வரியை நீக்க வேண்டும்.எம்.ஜி. ஆர் நூற்றாண்டு நடக்கிற இந்த காலகட்டத்தில் இதை மாநில அரசு யோசிக்க வேண்டும்.
கலைஞர் கொண்டு வந்த அந்த வரிச்சலுகையை ஜெயலலிதாவும் கடைப்பிடித்தார். கலையுலகிலிருந்து முதல்வராகி எம்.ஜி.ஆர், கலைஞர்,ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றியது மாதிரி முதல்வர் எடப்பாடி அவர்கள் வரிவிலக்கு அளித்து சினிமாவை காப்பாற்ற வேண்டும்
இவ்வாறு விக்ரம் பேசினார்.