அமைதிப் போராட்டத்தால் பெருமை கொள்கிறேன்: அரவிந்த்சாமி

அமைதிப் போராட்டத்தால் பெருமை கொள்கிறேன்: அரவிந்த்சாமி
Updated on
1 min read

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் அமைதிப் போராட்டத்தால் பெருமை கொள்வதாக அரவிந்த்சாமி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரவிந்த் சாமி "தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் போராடிவரும் நம் மக்கள் குறித்து பெருமை கொள்கிறேன். நீங்கள் ஒன்றானால் உங்களால் எதுவும் சாதிக்க முடியும். எப்போதும் மக்களுடன் மக்களுக்காக என் ஆதரவு இருக்கும். இது உங்கள் களம், உங்கள் வெற்றி.

இனி நம் உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டும்தான் விற்பனை செய்யவேண்டும் என நாம் ஏன் நமது மாநிலம் நடத்தும் ஆவினிடம் ஒரு கோரிக்கை வைக்கக் கூடாது?. நம்மை எந்த சட்டமும் தடுக்காது. நமது உள்ளூர் இனங்கள் செழிக்க இது வழிவகுக்கும். மற்ற பாலை விற்பதை படிப்படியாகக் குறைக்க வெண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அரவிந்த்சாமி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in