

'காலா'வில் ரஜினி அமர்ந்துள்ள ஜீப்பை அருங்காட்சியத்துக்கு கோரிய மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவருக்கு தனுஷ் பதிலளித்துள்ளார்.
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்களை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஜீப்பின் மீது ரஜினி அமர்ந்திருக்கும் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவர் ஆனந்த் மகேந்திரா "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனும் பெரும் ஆளுமை ஒரு காரை சிம்மாசனம் போல் பயன்படுத்தும்போது அந்த காரும் வரலாற்றுச் சின்னமாகிவிடுகிறது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட அந்தக் கார் பற்றித் தெரிந்தால் தயவு செய்து எங்களுக்குத் தெரிவியுங்கள். அந்தக் காரை எங்களது நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.
மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவரின் இக்கருத்தால், அவருடைய ட்விட்டர் தளம், ட்விட்டரில் ட்ரெண்ட்டானது. ஆனால், செயல் தலைவரின் கருத்துக்கு படக்குழுவினர் பதிலளிக்காமல் இருந்தனர்.
முதன் முறையாக தயாரிப்பாளர் தனுஷ் மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவரின் கருத்தை மேற்கோள் காட்டி, "மிக்க நன்றி சார்!!! அந்த வாகனம் தற்போது சூப்பர்ஸ்டாரால் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் உங்களிம் உறுதியாக கொண்டு சேர்க்கப்படும்" என்று பதிலளித்துள்ளார்.
தனுஷுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் "அற்புதம்.அல்லது வுண்டர்பார் என்றும் சொல்லலாம். உங்கள் பதிலுக்கு நன்றி தனுஷ். உங்களுக்கும், உங்கள் குழுவுக்கும் வாழ்த்துகள்" என ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
'காலா' படத்தில் ரஜினியோடு ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்து வருகிறார். மும்பையில் தொடர்ச்சியாக 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.