

'ப.பாண்டி' கதை இன்னும் தொடர வேண்டும் என்று இயக்குநர் தனுஷுக்கு கவுதம் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனுஷ் இயக்குநராக அறிமுகமாகி ஆகியுள்ள படம் 'ப.பாண்டி'. ராஜ்கிரண் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் தனுஷ், மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் 14-ம் தேதி வெளியான இப்படத்தை வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. கே.புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
இப்படத்தை பல்வேறு திரையுலகினர் பார்த்துவிட்டு, தனுஷை வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும், ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படங்களில் 'ப.பாண்டி' மக்களிடையே வரவேற்பைப் பெற்று திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் கவுதம் மேனன் "தயவு செய்து இக்கதையைத் தொடருங்கள் தனுஷ். ப.பாண்டி மற்றும் பூந்தென்றலுக்கு இடையே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை காண ஆவலாகவுள்ளேன்.
மேலும், இயக்குநர்கள் குடும்பத்துக்கு தனுஷை வரவேற்கிறேன். 'ப.பாண்டி' அருமையான படம். கண்டிப்பாக அனைத்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டிய படம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கு தனுஷ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.