திருப்பதி மொட்டை அடித்தது மாதிரி ஆகிவிட்டது இசை: இளையராஜா வேதனை

திருப்பதி மொட்டை அடித்தது மாதிரி ஆகிவிட்டது இசை: இளையராஜா வேதனை
Updated on
1 min read

திருப்பதிக்கு போய் மொட்டை அடித்தது மாதிரி ஆகிவிட்டது இசை என்று இளையராஜா வேதனையுடன் குறிப்பிட்டார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தனது 74-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பல ஆண்டுகளாக தன்னிடம் வேலை செய்த இசைக் கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், நண்பர்களுக்கு தன்னுடைய இசைக்கூடத்தில் விருந்து கொடுத்தார். இந்நிகழ்வில் இளையராஜா இசையில் உருவான பாடல்களை கலைஞர்கள் பாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் இளையராஜா பேசியது, "நான் இசையமைப்பாளராக இருந்த காலம் வேறு, அந்த 40 ஆண்டுகாலம் என்பது முடிந்துவிட்டது. இனிமேல் அந்தக் காலம் திரும்ப வருமா என்றால் வராது.

தற்போது பாடகர்கள், பாடகிகள், இசையமைப்பாளர், இசைக் கலைஞர்கள் ஒரே இடத்திலிருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒன்றாக உட்கார்ந்து ஒலிப்பதிவு செய்ய வேண்டிய நிலை இனிவராது. அப்படிப்பட்ட வாய்ப்பு உலகில் எங்குமே நடைபெறாது.

நவீன தொழில்நுட்பம் இசையுலகை ஆட்கொண்டு வேறு மாதிரி சென்றுவிட்டது. இதனால் இசையை உருவாக்குபவர், பாடுகிறவர் இல்லை என ஆகிவிட்டது.

சினிமாவில் சண்டைக்கலைஞர்கள் கையை, காலை ஆட்டுவது மாதிரி இசைத்துறையும் ஆகிவிட்டது. நல்ல இசை இப்போது இல்லை. மகத்தான இசை என்பது மாறிவிட்டது.

இசையில் எத்தனை ராகங்கள், பல வாத்திய கருவிகள், நல்ல உணர்வுகள் இருந்தன. இப்போது அனைத்துமே போய்விட்டது. திருப்பதிக்கு போய் மொட்டை அடித்தது மாதிரி ஆகிவிட்டது இசை. புருவத்தையும் சேர்த்து எடுத்த மாதிரி இசையுலகம் ஆகிவிட்டது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இந்நிலை தான்" என்று பேசியுள்ளார் இளையராஜா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in