ஒரு புறம் நாயகன்; மறுபுறம் காமெடியன்: வடிவேலுவின் புது ஆட்டம்!

ஒரு புறம் நாயகன்; மறுபுறம் காமெடியன்: வடிவேலுவின் புது ஆட்டம்!
Updated on
1 min read

'எலி' படத்தில் நாயகனாகவும், விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் படத்தில் காமெடியனாகவும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் வடிவேலு.

நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, 'தெனாலிராமன்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். வடிவேலு நாயகனாக நடித்த 'தெனாலிராமன்' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில், வடிவேலுவிடம் பல படங்களில் காமெடியனாக நடிக்கும்போது "இனிமேல் நாயகனாக மட்டும் தான் நடிப்பேன்." என்று கூறிவருவதாக தகவல்கள் வெளியாகின.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், 'தெனாலிராமன்' இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், அப்படத்தின் தலைப்பு 'எலி' என்றும் தெரிவித்தார் வடிவேலு.

தற்போது இயக்குநர் எழிலிடம் இணை இயக்குநராக பணியாற்றிய குமாரய்யா, விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, காமெடி வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் வடிவேலு.

நாயகனாக நடித்து வந்தாலும், மறுபுறம் மீண்டும் வடிவேலு தனது பழைய காமெடி களத்திற்கு திரும்பி இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in