சிவாஜி சிலையை அகற்றக் கோரும் வழக்கு: வேறு நீதிபதிகளின் அமர்வுக்கு மாற்றம்

சிவாஜி சிலையை அகற்றக் கோரும் வழக்கு: வேறு நீதிபதிகளின் அமர்வுக்கு மாற்றம்
Updated on
1 min read

சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றக் கோரும் வழக்கு வேறு நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நடிப்புக்கு இலக்கணமாக ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சிவாஜி கணேசனை கௌரவிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது. அங்கிருந்து அந்த சிலையை அகற்றக் கோரி பி.என்.சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மறைவுக்குப் பின் அவர் சார்பில் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.நாகராஜன் என்பவர் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், அங்கிருந்து சிலையை வேறு இடத்துக்கு மாற்றலாம் என போக்குவரத்துக் காவல் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்குமாறு கோரி நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவாஜி சமூக நலப் பேரவையை வழக்கில் இணைந்து கொள்ள அனுமதித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி தலைமையிலான வேறொரு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in