

"அமெரிக்காவில் நடக்கும் காளை சவாரி விளையாட்டை தடை செய்ய பீட்டா அமைப்புக்கு தைரியம் இருக்கா?" என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டதற்கு பீட்டா அமைப்பு பதிலளித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்ததுடன், ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் பீட்டா அமைப்பையும் தனது ட்வீட்களில் விமர்சித்து வந்தார்.
பீட்டா அமைப்புக்கு எதிராக கமல், "அமெரிக்காவில் நடைபெறும் காளை சவாரி விளையாட்டை தடைசெய்ய உங்களுக்கு தைரியம் இருக்கா? எங்களது காளைகளை எதிர்த்துப் போராட உங்களுக்கு தகுதி இல்லை" என்று பதிவிட்டிருந்தார்.
கமல்ஹாசனின் இந்தப் பதிவுக்கு பீட்டா அமைப்பு செவ்வாய்க்கிழமை பதிலளித்துள்ளது. இதுகுறித்து பீட்டா அமைப்பின் இந்திய தலைமை நிர்வாகி பூர்வ ஜோஷ்புரா அளித்த பதிலில், "பீட்டா இந்தியா, இந்தியாவிலுள்ள விலங்குகளுக்கு உதவும் இந்திய நிறுவனம்.
காளை சவாரி இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பிற இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினிலும் காளை சண்டைகள் பல இடங்களில் பீட்டாவால் தடை செய்ப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.