மே 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: விஷால் அறிவிப்பு

மே 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: விஷால் அறிவிப்பு
Updated on
1 min read

திருட்டு விசிடியை ஒழிக்கும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மே 30-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று விஷால் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்.

திருட்டு விசிடியால் தயாரிப்பாளர்களுக்கு வரும் வருமானம் குறைந்து விட்டது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். திருட்டு விசிடியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோத இணையதளம் மூலம் படம் பதிவிறக்கம் செய்வதையும் தடுக்க வேண்டும்.

சிறிய திரையரங்குகள் திறக்க அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும். ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வரும் போது குறைந்த வரியை திரைத்துறைக்கு விதிக்க வேண்டும். திரையரங்க வசூல் அனைத்தும் வெளிப்படையாக கணக்கு காட்டப்படும்

தமிழ் திரையுலகிற்கு மே 30-ம் தேதிக்குள் நல்லது நடக்கும் என நம்புகிறோம். சிறு தயாரிப்பாளர்கள் மானியத்திற்காக 10 வருடங்களாக காத்திருக்கிறார்கள். அதில் பல தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்தவர்கள். 7 வருடங்களாக தமிழக அரசு சார்பில் எந்ததொரு விருதும் வழங்கப்படவில்லை. அது கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு ஒரு அங்கீகாரமாகவும், ஊக்கமாகவும் இருக்கும்.

அனைவருமே ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகையால் மே 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளோம். எந்த ஒரு பணியுமே நடைபெறாது. எங்களால் படம் எடுப்பதற்கான ஒரு நிம்மதியான சூழல் வரும்வரை வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார் விஷால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in